*மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மாதம் ரூ.1000; தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?*
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள், உயர்கல்வியை தொடர்ந்து பயில வேண்டும் என்ற நோக்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக ’மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்’தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் தொடர்ந்து படித்திருக்க வேண்டும்.
அதன்படி மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடையில் நிற்காமல் தொடர்ந்து கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகிய அனைத்து மேற்படிப்புகளுக்கும் மாணவிகளுக்கான இந்த உதவித்தொகை கிடைக்கும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
*திட்டத்தின் நோக்கம்*
* பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
* குழந்தை திருமணத்தைத் தடுத்தல்
* குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல்.
* பெண் குழந்தைகள் கல்வி பயிலமுடியாமல் இடையில் நிறுத்துவதை குறைத்தல்
* பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
* உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல்.
* உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.
* பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்.
* இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்.
*திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்8
* மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
* தனியார்ப் பள்ளியில் Right to Education (RTE)-ன் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற, பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
* அரசுப் பள்ளிகள் என்பதில், பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
* மாணவிகள் 8 (அ) 10 (அ) 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். சான்றிதழ் (Certificate course), பட்டயம் (Diploma / ITI, D.TEd., courses), இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) (BA., B.SC.. B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.SC., (Agri). B.V.SC., B.FSC.. B.L., etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc., போன்றவை)
* தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
*யார் விண்ணப்பிக்கலாம்?*
* 2022-2023-ம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
* மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்...
* தொழிற்கல்வியைப் பொறுத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளும்...
* மருத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
* 2021-2022-ம் ஆண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை (under graduation) நிறைவு செய்துவிடுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பும் மாணவிகள் சந்தேகங்கள் இருப்பின் கூடுதல் தகவலை பெற 14417 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை / தொழிற்கல்வி மருத்துவக் கல்வியில் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வழியாக விண்ணபிக்கலாம்.
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய https://penkalvi.tn.gov.in இந்த இணைய தளத்தை கிளிக் செய்யுங்கள்.
from கல்வி அமுது https://ift.tt/v5r0lqx
via IFTTT
0 Comments